Saturday, November 5, 2011

கூர்மையும் நேர்மையும்

இந்த பெரிய பிரபஞ்சத்தில் மனித இனத்தினுடைய பரிமாணம், தோற்றம், வளர்ச்சி, இயக்கம் எல்லாமே இயற்கையின் உச்சக்கட்டச் சிறப்புகள் ஆகும். மனித இனமானது இயற்கையின் சிறப்புமிக்க பொக்கிஷங்களை சேர்த்து வைத்திருக்கிற களஞ்சியம் ஆகும்.பன்னெடுங்காலமாக இயற்கையின் ஒவ்வொரு அதிசயமும் மனிதனுடைய கருமையத்தில் சுருக்கி இருப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.

வான் காந்தத்தையும், சீவ காந்தத்தையும் விளங்கிக் கொள்வதன் மூலம், ஒருவர் வாழ்க்கையின் எல்லா உண்மைகளையும், பிரபஞ்சத்தின் எல்லா இரகசியங்களையும் தெரிந்து கொள்ள முடியும். ஆறாவது அறிவில் கூர்மை, நேர்மை என்னும் இருவகை உயர் திறன்கள் உள்ளன. கூர்மை விஞ்ஞானமாகவும், நேர்மை தத்துவ ஞானமாகவும் திகழும். காந்த ஞானம் அறிவின் இரு திறன்களையும் வளர்க்கும்.

மனிதனுடைய மனத்தின் அடித்தளமாக உள்ள ஆன்மீக அறிவு வளத்தை நிறைவாகப் பெற முடியும். இந்த வகையில் ஒருவர், தான் உள்ளுணர்வாகப் பெற வேண்டிய பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றல், உயிர்ச்சக்தி, காந்தம் இவற்றை உணர்ந்தால் அவரிடம் எப்பொழுதும் விஞ்ஞான அறிவு ஓங்குவதோடு தெய்வீகக் குணங்களாகிய அன்பும், கருணையும் மலர்ந்து அவருடைய வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும்.

-அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி

Friday, November 4, 2011

இறைநிலையுணர்ந்த அறிவு

பேரியக்க மண்டல தோற்றங்கள் அனைத்திலும் சிறந்ததோர் தெய்வீக கருவூலம் மனிதப்பிறப்பு. பிரம்மம் என்பதே தெய்வம் எனப்போற்றப்படுகிறது. அதுவே தான், இறைவெளியாக எங்கும் நீக்கமற நிறைந்துள்ள சுத்தவெளியாகும். இதுவே எல்லாம் வல்ல பேராற்றலாகும். இது எல்லையற்ற விரிவு நிலையுடைமையாக இருப்பதால் புலன்களுக்கு எட்டாத ஒன்றாக உள்ளது.
இது விரைவு, பருமன், காலம், தூரம் எனும் நான்கு கணக்குகளுக்கும் உட்படாதது. இம்மாபெரும் ஆற்றலிலிருந்து தான் பரமாணுவேனும் நுண்ணியக்க துகள் தோன்றியது. பரமாணுக்கள் பல இணைந்து அணுவாகவும், அணுக்கள் பல இணைந்து பேரணு, செல்கள், பல உருவத் தோற்றங்கள், வானுலவும் கோள்கள், உலகம் மீது வாழும் ஓரறிவுத் தாவரம் முதல் ஆறறிவு மனிதன் வரையில் தொடரியக்கமான பரிமாணம் தான், "பிரம்மம்" எனும் பேராற்றலின் சரித்திரம்.
மனிதன் என்ற தோற்றமே, பிரம்மத்தின் ஆதி நிலையாகவுள்ள இறைவெளி முதற் பொருளாகவும், ஆறறிவு கொண்ட மனித மனமே இறுதியாகவும் உள்ளன. ஆதி முதல் அந்தம் வரையில் அனைத்தையும் இணைத்து ஒரே அகக்காட்சியாக காணக்கூடிய பேரறிவு தான் பிரம்மா ஞானமாகும். இத்தகைய அறிவுதான் இறைநிலையுணர்ந்த அறிவு. அதுவே தான், முடிவு நிலையான மனத்தின் ஊடுள்ள உட்பொருளான அறிவாகவும்,அவ்வறிவுதான் தானாகவும் இருக்கும் முழுமை நிலையுணர்ந்த தெளிவே பிரம்மஞானம் ஆகும்.

-அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி..

Thursday, November 3, 2011

ஐந்திணைப்புப் பண்பாடு

தற்சோதனை என்பது தன்னைப் பற்றி ஆராய்தல் என்று விளங்கும். தன்னைப் பற்றி சிந்தித்தல், தன குறையுணர்தல், தான் திருத்தம் பெற திட்டம் வகுத்தல், வகுத்த வழியே செயலாற்றி வெற்றி பெறுதல் என்பன எல்லாம் தற்சோதனை பயிற்சியில் அடங்கும்.
தற்சோதனையை நான்கு பிரிவுகளாக்கி ஒவ்வொன்றாய் பயிற்சி அளிக்கப்படுகிறது.
முதல் பயிற்சி:
நான் யார்? என்ற வினாவினை எழுப்பி விடை பெறுதலாகும்.

உடல், உயிர், அறிவு, மெய்ப்பொருள் என்ற நான்கும் இணைந்தே மனிதன் என்ற இயக்கமாக விளங்குகிறது.

இந்த நான்கு நிலைகளைப் பற்றி விளக்கத்தின் மூலமும், சிந்தனையின் மூலமும் உணர்ந்து கொள்வதே மெய்யுணர்வாகும்.

இரண்டாவது பயிற்சி:
எண்ணம், சொல், செயல் இவற்றை ஒழுங்குப்படுத்துவதாகும்.

தனக்கும், பிறர்க்கும், தற்காலத்திலும், பிற்காலத்திலும் அறிவிற்கும் உடல் உணர்ச்சிக்கும் துன்பம் எழாத அளவிலும், முறையிலும் எண்ணம், சொல், செயல் மூன்றையும் பண்படுத்திப் பயன் பெறுதலாகும்.

மூன்றாவது பயிற்சி:
அறுகுண சீரமைப்பு :

பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் எனும் ஆறு குணங்களையும்
நிறைமனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, நேர் நிறை விளக்கம், மன்னிப்பு என்ற ஆறு குணங்களாக மாற்றும் பயிற்சி முறையே அறுகுண சீரமைப்பாகும்.

மனிதன் உணர்ச்சி வயப்படும்போதுதான் அவன் ஆறு தீய குணங்களாக மாறுகிறான். அறிவின் வயம் நின்ற மாறாத விழிப்பு நிலைப் பெற்றால் உணர்ச்சி வயமாக மாற வழியே இல்லை. மனித இனப் பண்பாட்டிற்கு அறுகுண சீரமைப்பு இன்றியமையாததாகும்.

நான்காவது பயிற்சி:
கவலை ஒழித்தல்:

அறியாமை, உணர்ச்சி வயமாதல், சோம்பேறித்தனம் இவற்றால் செயல் தவறுகளும், கணிப்பு தவறுகளும் ஏற்படுகின்றன.

இவைகளை எல்லாம் ஆராய்ந்து முறைப்படி எல்லா கவலைகளையும் ஒழித்து நலம் பெற வேண்டும்.


குண்டலினி யோகத்தால் விழிப்பு நிலை பெற்று தற்சோதனைப் பயிற்சி முறையால் மனத்தூய்மையும், வினைத்தூய்மையும் உண்டானால், அவற்றின் அடிப்படையில் ஒழுக்க உணர்வு, கடமை உணர்வு, மெய்ப்பொருள் உணர்வு என்ற மூன்றும் இயல்பாக வந்து விடும்.

இத்தகைய பண்பாட்டின் பயிற்சி முறையை "ஐந்திணைப்புப் பண்பாடு" என்று வழங்குகிறோம்.

- அருள் தந்தை வேதாத்ரி மகரிஷி.

Friday, January 7, 2011

எனக்கு பிடித்த வரிகள்...

போலியான மனிதர்கள், போலியான உறவுகள்

இந்த மானிடப்பிறப்பு வேதனை நிறைந்ததுதான்

இருந்தும் நீ சாதனை படைக்கிறாய்

இச்சமுதாயத்துக்கு உன் வேதனை எங்கே புரியும்

குறுகிய சிந்தனைகளுடன் வாழும் இவர்களுக்கிடையில்

நீ வாழ்ந்துதான் ஆக வேண்டும்

மனம்விட்டுச் சிரித்துவிடு கவலையை மறக்க

பிறருக்கு ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி

ஒருபோதும் தன்னை எண்ணி உருகியதில்லையே

நீ சென்ற வாழ்க்கைப் பாதையில்

ஈராமான உன் காலடிகளைக் கண்டு

நான் பேச வார்த்தையின்றி மெளனமானேன்

இந்த மனிதவாழ்க்கையென்னும் நதி

எங்கே போய்ச் சேர்கிறது

சொர்க்கத்திலும் சேரலாம் சோகத்திலும் சேரலாம்

இப்புவியில் வாழ நீயும் கற்றுக்கொள்

சுயனலவாதிகளே அதிகமாக வாழ்கிறார்கள் இங்கு

மண் தின்னும் உடலை சுமந்து கொண்டு

ஏதோ சொல்லவந்தேன் வார்த்தைகள்

மட்டுமெனோ வெளிவரவில்லை

மனம் மட்டும் ஏனோ அழுகிறது உனக்காக

கவலைகள் என்று நீ நினைப்பதெல்லாம்

கரைந்து போகும் ஒரு நாள்

உன் கண் முன்னே காத்திரு நண்பனே....

- நன்றி சிந்துகவி