இந்த பெரிய பிரபஞ்சத்தில் மனித இனத்தினுடைய பரிமாணம், தோற்றம், வளர்ச்சி, இயக்கம் எல்லாமே இயற்கையின் உச்சக்கட்டச் சிறப்புகள் ஆகும். மனித இனமானது இயற்கையின் சிறப்புமிக்க பொக்கிஷங்களை சேர்த்து வைத்திருக்கிற களஞ்சியம் ஆகும்.பன்னெடுங்காலமாக இயற்கையின் ஒவ்வொரு அதிசயமும் மனிதனுடைய கருமையத்தில் சுருக்கி இருப்பாக வைக்கப்பட்டிருக்கிறது.
வான் காந்தத்தையும், சீவ காந்தத்தையும் விளங்கிக் கொள்வதன் மூலம், ஒருவர் வாழ்க்கையின் எல்லா உண்மைகளையும், பிரபஞ்சத்தின் எல்லா இரகசியங்களையும் தெரிந்து கொள்ள முடியும். ஆறாவது அறிவில் கூர்மை, நேர்மை என்னும் இருவகை உயர் திறன்கள் உள்ளன. கூர்மை விஞ்ஞானமாகவும், நேர்மை தத்துவ ஞானமாகவும் திகழும். காந்த ஞானம் அறிவின் இரு திறன்களையும் வளர்க்கும்.
மனிதனுடைய மனத்தின் அடித்தளமாக உள்ள ஆன்மீக அறிவு வளத்தை நிறைவாகப் பெற முடியும். இந்த வகையில் ஒருவர், தான் உள்ளுணர்வாகப் பெற வேண்டிய பிரபஞ்ச ஒருங்கிணைப்பு ஆற்றல், உயிர்ச்சக்தி, காந்தம் இவற்றை உணர்ந்தால் அவரிடம் எப்பொழுதும் விஞ்ஞான அறிவு ஓங்குவதோடு தெய்வீகக் குணங்களாகிய அன்பும், கருணையும் மலர்ந்து அவருடைய வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும்.
-அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி
No comments:
Post a Comment