Wednesday, April 11, 2012

கலியுக நண்பன்...

சரக்கடிக்கும் போது சொன்னான்
நண்பன் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று....

நண்பனாய் இருக்க வேண்டிய நேரத்தில் சொன்னான்
" எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு மச்சி"....

ஒரு "மாதிரி" யாய் ஒரு வாழ்க்கை...

அப்பா மகனிடம் சொன்னார்
மகனே! நீ அப்துல்கலாம் மாதிரி பெரிய விஞ்ஞானி ஆகவேண்டும் என்று..!

அம்மா மகளிடம் சொன்னார்
மகளே! நீ கல்பனா சாவ்லா மாதிரி விண்ணில் பறக்க வேண்டும் என்று..!

தங்கை அண்ணனிடம் சொன்னாள்
அண்ணா! நீ சச்சின் மாதிரி பெரிய கிரிக்கெட்டராய் வர வேண்டும் என்று..!

ஆகமொத்தம் யாருமே ஒரு நல்ல மனிதனாய் இருக்க சொல்ல மறந்ததன் விளைவோ..!!?
எல்லோரும் ஒரு "மாதிரி"யாகவே சுற்றுகிறார்களோ....?!!!!!!!

Tuesday, April 10, 2012

மனிதா நீ எப்பொழுது மனிதனாய் வாழ்வாய்....?

துன்பத்தில் நியாயம் நேர்மை என புலம்பும் மனிதா...!
வசதியாய் வாய்ப்புகள் அமையும்பொழுது
அவைகளை வசதியாய் மறந்துவிடுவது ஏனோ..!

ஏழ்மையில் சமுதாயத்தை சாடும் நீ...!
பணம் வந்ததும் ஏழ்மை சமுதாயம்
உனக்கு ஏளனமாய் தெரிவதுதான் ஏனோ..!
நீ இனம் மாறும் மாயைதான் என்னவோ..!

பதவிகளை பற்றி பாடங்கள் நடத்தும் நீ...!
பதவி வந்ததும் பாடங்களை மறந்து
புகழை நோக்கி ஓடும் மயக்கம்தான் ஏனோ..!
பதவிகள் பெற நீ படும்பாடுகள் என்ன..?
புகழைப் பெற நீ செய்யும் வேலைகள்தான் என்னென்ன..?
குழி பறிக்கும் தந்திரங்கள்தான் என்னென்ன...?

ஓ மனிதா...!!! சிறந்த மனிதர்களால் மட்டுமே பதவிகள் சிறக்கின்றனவே தவிர
பதவிகளால் ஒருவன் சிறந்த மனிதனாயிவிடுவதில்லை..

தவறுகளை பற்றி தவறு செய்பவர்களே சுட்டிக் காட்டும் வினோதங்கள் என்ன..?
மரியாதையை பற்றி மரியாதை தெரியாதவர்கள் பேசும் மாயங்கள் என்ன..?
உலகின் தவறுகளை ஒரு விரலால் சுட்டிக் காட்டும் மனிதா..!
அடக்கமாய் உனது தவறுகளை சுட்டிக் காட்டும் மற்ற விரல்களுக்கு பதிலென்ன மனிதா..!

மனசாட்சிகள் மயானங்களில் புதைக்கப் பட்டதோ..?
இல்லை மனசாட்சிகள் மலங்களாய் வெளியேறிப் போனதோ..?
மனிதா நீ எப்பொழுது மனிதனாய் வாழ்வாய்....!!!

Wednesday, January 11, 2012

பாரதம் உயிர்தெழட்டும்:

வேதங்களோ, பைபிளோ, குரானோ இல்லாத ஓரிடத்திற்கு மனித இனத்தை அழைத்து செல்ல நாம் விரும்புகிறோம். ஆனால் வேதங்களையும் பைபிளையும் குரானையும் சமரசப்படுத்துவதன் மூலம் இது செய்யப்பட வேண்டும். ஒருமை தத்துவமான ஒரே மதத்தின் பல்வேறு வெளிப்பாடுகளே உலக மதங்கள். ஒவ்வொருவரும் தங்களுக்கேற்ற நெறியை தேர்ந்தெடுத்துக் கொள்ளவே இவ்வாறு பல மதங்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மனித இனத்துக்கு போதிக்க வேண்டும். இந்து மதம், இஸ்லாம் ஆகிய இருபெரும் மதங்களின் சேர்க்கையே, அதாவது வேதாந்த மூளையும் இஸ்லாமிய உடலும் நமது தாய் நாட்டிற்கு ஒரே நம்பிக்கை. எனவே வேதாந்த கொள்கைகள் எவ்வளவு நேர்த்தியாக, சிறப்பாக இருந்தாலும் செயல்முறை முகம்மதிய மதத்தின் உதவி இல்லாமல் மனித இனத்துக்கு சிறிதும் பயன் அற்றவையே. இந்த குழப்பத்தில் இருந்தும் போராட்டத்தில் இருந்தும் பெருமை பொருந்தியதாக, யாராலும் வெல்ல முடியாததாக, வேதாந்த மூளையுடனும் இஸ்லாமிய உடலுடனும் வருங்காலத்தின் இந்தியா எழுவதை என் மனக்கண்ணால் நான் காண்கிறேன்.

உலகப் பொருட்களின் ஒளியால் மதிமயங்கிக் கிடப்பவர்கள், உண்பது குடிப்பது போகங்களை அனுபவிப்பது இவற்றிற்காகத்தான் வாழ்கிறோம் என்று எண்ணுபவர்கள், மண்ணும் பொன்னும்தான் உடைமைகள் என்று நினைப்பவர்கள், இன்பம் என்றாலே புலன்களால் நுகரும் இன்பம் தான் என்று கருதுபவர்கள், பணம்தான் கடவுள் என்று நினைப்பவர்கள், சுலபமாகவும் வசதியாகவும் வாழ்ந்து விட்டு இறப்பதுதான் வாழ்க்கையின் குறிக்கோள் என்று எண்ணுபவர்கள், உயர்ந்த விசயங்களை பற்றி நினைக்காத மனம் கொண்டவர்கள், தங்கள் வாழ்க்கையை சூழ்ந்திருக்கின்ற புலனின்பப் பொருட்களை தவிர மேலானது ஒன்று இருக்கிறது என்று நினைத்து பார்க்காதவர்கள் - இவர்கள் இந்தியாவிற்கு போனால் என்ன காண்பார்கள்? எங்கு பார்த்தாலும் வறுமை, அழுக்கு, மூடநம்பிக்கை, இருட்டு, பயங்கரம் இவற்றைத்தான். ஏன்? ஏனெனில் அவர்களை பொறுத்தவரை நாகரிகம் என்றால் உடை, கல்வி, சமூக மரியாதை - இவைதான். மேலை நாடுகள் தங்கள் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு தங்களால் இயன்ற அளவு முயன்று உள்ளன.
இந்தியா வேறு வழியில் சென்றது. யாரையும் வெல்வதற்காக தங்கள் நாட்டின் எல்லைகளை தாண்டி செல்லாதவர்கள், பிறர் பொருளுக்கு ஆசைப்படாதவர்கள் உலக வரலாற்றிலேயே இந்தியர்கள் மட்டும்தான். அவர்களிடம் இருந்த ஒரே தவறு என்னவென்றால் அவர்களுடைய நிலங்கள் வளம் மிக்கவையாக இருந்தன, அவர்கள் மிகவும் உழைத்து பாடுபட்டு பணம் சம்பாதித்தனர். அது பிற நாட்டினர் அங்கு புகுந்து அவர்களை அழிக்கும்படி ஆசை காட்டியது போலாகிவிட்டது.மற்றவர்கள் தங்கள் நாட்டை அழித்தாலும், தங்களை காட்டுமிராண்டிகள் என்று அழைத்தாலும், அதை மனநிறைவாக அவர்கள் ஏற்று கொள்கின்றனர். பதிலாக உலகிற்கு கடவுளைப் பற்றிய தங்கள் காட்சிகளை அனுப்பவே விரும்புகின்றனர். மனித இயல்பின் ரகசியங்களை உலகிற்கு வெளிப்படுத்த விரும்புகின்றனர். உண்மை மனிதனை மறைத்துக் கொண்டிருக்கும் திரையை கிழிக்க விரும்புகின்றனர். ஏனெனில் அவர்கள் கனவை அறிந்தவர்கள். இந்த உலோகாயதத்திற்கு பின்னால் மனிதனின் உண்மையான தெய்வீக இயல்பு இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியும். இந்த தெய்வீக இயல்பை எந்த பாவமும் மாசுபடுத்த முடியாது. எந்த குற்றமும் கெடுக்க முடியாது. எந்த ஆசையும் களங்கப் படுத்த முடியாது. தீ எரிக்க முடியாது. நீர் நனைக்க முடியாது. வெப்பம் உலர்த்த முடியாது. மரணம் கொல்ல முடியாது. மேலை நாட்டினருக்கு புலன்களால் அறியப்படுகின்ற புறப்பொருட்கள் எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை, இந்தியருக்கு மனிதனின் உண்மையான இயல்பு.
இயற்கையை வெல்ல தான் மனிதன் பிறந்திருக்கிறான் உண்மை. இயற்கை என்பதை ஜடவுலகம் அல்லது புறப்பிரபஞ்சம் என்று மேலை நாட்டினர் கொள்கின்றனர். மலைகள், கடல்கள், நதிகள் என்று அளவற்ற சக்திகளையும், எல்லையற்ற மாறுபாடுகளையும் கொண்ட இயற்கை கம்பீரமானதுதான் . ஆனால் அதை விட கம்பீரமானது ஒன்று இருக்கிறது. அதுதான் மனிதனின் அக இயற்கை. இது சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் இவற்றை விட உயர்ந்தது. பூமியை விட ,ஏன் பௌதீகப் பிரபஞ்சத்தை விட உயர்ந்தது. நம் சிறிய வாழ்க்கைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. அது இன்னொரு துறை, அதனை நாம் ஆராய வேண்டும். மற்ற துறையில் மேலைநாட்டவர் சிறந்து விளங்குவது போல் இந்த துறையில் கீழைநாட்டவர் சிறந்து விளங்குகிறார்கள் .
ஆகவே ஆன்மீகத் துறையைச் சீரமைக்க வேண்டுமானால், அது கீழை நாடுகளிலிருந்துதான் வர வேண்டும் என்பது பொருத்தமே. அவ்வாறே கீழை நாட்டான் எந்திரங்கள் தயாரிப்பதைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால், அவன் மேலை நாட்டவரின் காலடியில் உட்கார்ந்து கற்றுக் கொள்ளவேண்டும் என்பதும் பொருத்தமே. மேலை நாட்டான் ஆன்மிகம், கடவுள், ஆன்மா, பிரபஞ்ச ரகசியமும் உட்பொருளும் - இவை பற்றியெல்லாம் அறிந்து கொள்ள விரும்பினால், அவன் கீழை நாட்டினரின் காலடியில் அமர்ந்து கற்க வேண்டும்.
ஆன்மீக ஞானம் ஒன்றினாலேயே நமது துன்பங்களை என்றென்றைக்குமாக ஒழிக்க முடியும். மற்ற எல்லா அறிவும் நமது தேவைகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கே நீக்கும். தேவைகளை எழுப்புகின்ற மூலகாரணத்தை ஆன்ம ஞானத்தால் மட்டுமே முற்றிலுமாக வேரறுக்க முடியும். உடல் வலிமையின் வெளிப்பாடுகள் மகத்தானவை. விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகளிலும் எந்திரங்களிலும் காணப்படுகின்ற அறிவு வெளிப்பாடுகள் உன்னதமானவை. ஆனால் இவை எதுவும் ஆன்மீக சக்தியைவிட அதிக ஆற்றல் கொண்டவை அல்ல.
--சுவாமி விவேகனந்தர்...